ஷா ஆலம், ஜன 20- கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடர்ச்சியாக பெய்யும் மழையின் காரணமாக வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை ஆறு முறை எச்சரிக்கை விடுத்த போதிலும் அதனை சில பேரிடர் மேலாண்மை தரப்புகள் பொருட்படுத்தவில்லை.
வடகிழக்கு பருவ மழை காரணமாக கிழக்குக் கரை மாநிலங்களில்தான் கடுமையான வெள்ளம் ஏற்படும் என அத்தரப்பினர் கருதியதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
பருவமழையை எதிர் கொள்வதில் கிழக்கு கரை மாநிலங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், சிலாங்கூரில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான வெள்ளம் அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்காத ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் 380 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. இது சராசரி ஒரு மாதத்திற்கு பெய்யும் மழைக்கு சமமானதாகும் என்று அவர் சொன்னார்.
இன்று 14 வது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கான சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலாங்கூரில் அதே சமயத்தில் ஏற்பட்ட கடல் பெருக்கும் மாநிலத்தில் வெள்ள நிலைமையை மேலும் மோசமாக்கியதாக அவர் குறிப்பிட்டார்.