HEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசியைப் பெறத் தயங்காதீர்- சிலாங்கூர் நடவடிக்கை பணிக்குழு அறிவுறுத்து

ஷா ஆலம், ஜன 30- புதிய வகை கோவிட்-19 திரிபுகளை எதிர்கொள்ளவும் நோய்த் தொற்றின் கடுமையான தாக்கத்தை குறைப்பதற்கு ஏதுவாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறவும் அனைவரும் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்கு பொது மக்கள் தயங்கக்கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

தடுப்பூசியைப் பெற்ற பிறகு ஏற்படக்கூடிய லேசான பக்க விளைவுகளைக் கண்டு அஞ்சக்கூடாது. காரணம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் போது இத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

தடுப்பூசியைப் பெற்ற பின்னர் பலருக்கு காய்ச்சல், உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். இது நல்லதற்கே. காரணம் உடல் எதிர்வினையாற்றுவதை  இந்த அறிகுறிகள் காட்டுவதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாக்கம் காண்கிறது என்றார் அவர்.

ஊக்கத் தடுப்பூசி பெற்றதால் ஏற்பட்ட மரணம் அல்லது பக்கவாதம் போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு எனக் கூறிய அவர், இது போன்றச் சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன என்றார்.

தடுப்பூசி தொடர்பில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களைக் கண்டு கலக்கம்  அடைய வேண்டாம் என்றும் பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19 நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாவதை மூன்றாவது தடுப்பூசி வெற்றிகரமாக தடுத்துள்ளதை ஆய்வுகளும் அறிவியல் சோதனைகளும் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :