ஷா ஆலம், பிப் 11- இம்மாதம் 14 ஆம் தேதி லோரி ஏசான் மூலம் கோழி மற்றும் முட்டையை விலை குறுக்கீட்டுத் திட்டத்தின் வாயிலாக விற்பனை செய்வதன் வழி 5,080 வெள்ளி வருமானம் ஈட்ட சிலாங்கூர் மாநில விவசாய பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு இடத்திற்கும் கொண்டுச் செல்லப்படும் கோழி, முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவைப் பொறுத்து விற்பனைத் தொகை அமையும் என்று அக்கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முகமது கைரி முகமது ராஸி கூறினார்.
ஒவ்வொரு லோரியிலும் 200 கோழிகள், 150 தட்டு முட்டைகள், 50 பழ பொட்டலங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த லோரி ஏசான் மார்ச் மாதம் இறுதி வரை நேர அட்டவணைக்கேற்ப காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி பயணத்தை மேற்கொள்ளும் என்று அவர் மேலும் சொன்னார்.
இம்மாதம் 7 ஆம் தேதி முதல் சிலாங்கூர் மொத்த விற்பனை மையம் மற்றும் ஷா ஆலம், செக்சன் 14 இல் உள்ள பி.கே.பி.எஸ். தலைமையகம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் இந்த விலைக் குறுக்கீட்டுத் திட்டத்திற்கு கிடைத்த அமோக ஆதரவைத் தொடர்ந்து இந்த நடமாடும் விற்பனைச் சந்தை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நடுத்தர அளவிலான கோழி கிலோ 8.00 வெள்ளி விலையில் இரு வார காலத்திற்கு விற்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இம்மாதம் 6 ஆம் தேதி கூறியிருந்தார்.