ஷா ஆலம், பிப் 20: இந்தோனேசியாவை 3-0 தில் வென்றதன் வழி,குழுக்களிடையே ஆன 2022 ஆசிய பூப்பந்து போட்டியை (BATC) தேசிய ஆண்கள் அணி வென்றது. 2016 ஆம் ஆண்டில் BATC அறிமுகப்படுத்தப் பட்டதிலிருந்து, இந்த முதல் வெற்றியை,இங்குள்ள செத்தியா நகர மாநாட்டு மையத்தில் அதன் சொந்த ஆதரவாளர்களுக்கு முன்னால் வென்றதை இன்னும் இனிமையானதாக கருதுகின்றனர் விளையாட்டாளர்கள்.
தேசிய ஒற்றையர் சாம்பியனான லீ ஜி ஜியா, முதல் புள்ளியாக இருந்த சிகோ ஆரா டிவி வார்டோயோவை 14-21, 21-12 மற்றும் 21-10 என்ற புள்ளிகளுடன் வென்றார். இரண்டாவது ஆட்டத்தில் தேசிய இரட்டையர் ஜோடியான சியா ஆரோன்-சோ வூய் யிக் ஜோடி 17-21, 21-13, 21-18 என்ற புள்ளிகளுடன் மூன்று செட் ஆட்டத்தில் லியோ ரோலி கார்னாண்டோ-டேனியல் மார்தினை வீழ்த்த முடிந்தது.
நாட்டின் இரண்டாவது ஒற்றையர் ஆட்டக்காரரான ங் டிசே யோங் , 21-14, 21-15 என்ற செட் கணக்கில் இக்சன் லியோனார்டோ இமானுவேல் ரம்பேவை தோற்கடித்து இந்தோனேசியாவின் கனவை சிதைத்தார்.
போட்டி கோப்பை சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி, தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் அவர்களால் வழங்கப்பட்டது. பிப்ரவரி 15 முதல் ஆறு நாள் போட்டிகள் இந்தோனேசியா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் கலந்து கொண்டன, மேலும் ஆஸ்ட்ரோவில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.