கோலாலம்பூர், பிப் 23- வயது வேறுபாடின்றிக் கோவிட்-19 தடுப்பூசி பெறத் தவறிய அனைவருக்கும் நோய்த் தொற்றின் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பும் அதனால் மரணமும் ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது.
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரையிலான சுகாதார அமைச்சின் தரவுகள் இந்த உண்மையைப் புலப்படுத்துவதாகச் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
ஒவ்வொரு ஒரு லட்சம் பேரை அடிப்படையாகக் கொண்டு நான்காம் ஐந்தாம் கட்ட நோயாளிகள் மற்றும் நோய்த் தொற்றினால் ஏற்படும் மரணங்களை இந்த ஆய்வு மையமாகக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
ஏறக்குறைய அனைத்து வயதினரையும் இந்தத் தரவுகள் உள்ளடக்கியுள்ளதைச் சுகாதார அமைச்சின் விளக்கப்படம் காட்டுகிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.
மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் எத்தனை பேர் நான்காம் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்ற விபரம் அந்த விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊக்கத் தடுப்பூசி பெற்றவர்கள் மட்டுமே கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து மிகவும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்றும் நோர் ஹிஷாம் சொன்னார்.
கோவிட்-19 நோயின் கடும் தாக்கத்திலிருந்தும் உயிரிழப்பிலிருந்தும் சிறப்பான பாதுகாப்பை ஊக்கத் தடுப்பூசி வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.