ஷா ஆலம், மார்ச் 1- சிலாங்கூரில் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு திட்ட அமலாக்கத்தில் சுற்றுச்சூழல் விளைவுகள் மீது மாநில அரசு அதிமுக்கியக் கவனம் செலுத்துகிறது.
பசுமை நிறைந்த வாழ்க்கைச் சூழலை உருவாக்கவும் கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தடுக்கவும் இவ்விரு அம்சங்களும் சமநிலையாக இருப்பது அவசியம் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிலாங்கூரைக் குறைந்த கரியமிலவாயுவை வெளியேற்றும் மாநிலமாக மாற்றும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றவும் இது உதவும் என்று அவர் சொன்னார்.
அமல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் சுற்றுவட்டார மக்களுக்கு விளைவுகளை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டறிவதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் அரசாங்க மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் உத்தேசக் கட்டிடத் தொகுதிக்கான வடிவமைப்புப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற ஏ.ஜே.சி. கான்சல்டன்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு 50,000 வெள்ளி ரொக்கம் மற்றும் வெற்றிக் கோப்பையை மந்திரி புசார் வழங்கினார்.