ECONOMYHEALTHNATIONAL

நேற்று 25,854 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று பீடிப்பு- 0.59 விழுக்காட்டினருக்கு மட்டுமே கடும் பாதிப்பு

கோலாலம்பூர், மார்ச் 2– நாட்டில் நேற்று பதிவான 25,854 கோவிட்-19 சம்பவங்களில் 152 அல்லது 0.59 விழுக்காடு மட்டுமே மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளன.

எஞ்சிய 25,702 சம்பவங்கள் அல்லது 99.41 விழுக்காடு லேசான நோய்த் தாக்கம் கொண்ட ஒன்றாம்  மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அந்த 152 பேரில் 25 பேர் தடுப்பூசியை அறவே பெறாதவர்கள் அல்லது முழுமையாகப் பெறாதவர்கள் என்று அவர் சொன்னார்.

மேலும் 89 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்று ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருப்பவர்கள். இதர 89 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 1,754 கோவிட்-19 நோயாளிகளில் 575 பேர் மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பைக் கொண்டிருந்த வேளையில் 1,179 பேர் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

நேற்று 25,548 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 42 ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் 374 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 213 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :