பெட்டாலிங் ஜெயா, மார்ச் 10- இவ்வாண்டு இரு ரமலான் சந்தைகளில் வருகையாளர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு இன்ஃப்ரா ரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர் செயல்பாட்டு முறையைப் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அறிமுகப்படுத்தவுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றைக் தடுப்பதற்கு ஏதுவாகச் சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இந்த முறை அமல்படுத்தப்படுவதாகப் பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் கூறினார்.
கிளானா ஜெயா, எஸ்.எஸ். 6/1 மற்றும் கோத்தா டாமன்சாரா செக்சன் 4 ஆகிய இரு ரமலான் சந்தைகளில் இந்த முறை பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சந்தையிலுள்ள ஒவ்வொரு கடையிலும் ஒரு நேரத்தில் இருவருக்கும் மேற்பட்டவர்கள் இல்லாதிருப்பதை உறுதி செய்வதற்கு வருகையாளர்களை கணக்கிடும் முறை பயன்படுத்தப்படுகிறது. சுருங்கச் சொன்னால் ஒரு இடத்தில் 30 வணிக மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் ஒரு சமயத்தில் 60 பேர் மட்டுமே பொருள்களை வாங்க முடியும்.
கோவிட்-19 பெருந்தொற்றின் பரவலுக்கு காரணமாக விளங்கும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கு அமல்படுத்தப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமுறை இதுவாகும் என்றார் அவர்.