ஷா ஆலம், மார்ச் 14- உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் புதிய மற்றும் நடப்பு முதலீடுகளை ஊக்குவிக்க மாநில அரசு மேற்கொண்ட எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் பாராட்டினார்.
மாநில அரசின் இந்நடவடிக்கைகளின் வாயிலாகக் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 196 கோடி வெள்ளி மதிப்பிலான 182 தொழிலியல் திட்டங்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியதாகச் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.
தொழிலியல் திட்டங்களைப் பொறுத்த வரை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மாநில அரசின் இந்த அடைவு நிலை அதிகமானதாகும். இதன் வழி 12,226 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்கு 14 வது மாநில சட்டமன்றத்தின் 5 ஆம் தவணைக்கான முதலாவது கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.