கோலாலம்பூர், மார்ச் 14- கடந்த 2019 முதல் 2012 வரையிலான காலக்கட்டத்தில் 161 கோடி வெள்ளியை சம்பந்தப்படுத்திய 51,631 இணைய மோசடி தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இணையத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் பொருள் கொள்முதல் தொடர்பில் 18,857 புகார்களும் இல்லாத கடனுதவித் திட்ட மோசடி தொடர்பில் 15,546 புகார்களும் கிடைக்கப்பெற்றதாக உள்துறை துணையமைச்சர் டத்தோ ஜோனதன் யாசின் கூறினார்.
இத்தகைய மோசடிக் கும்பல்களை முறியடிக்க அரச மலேசிய போலீஸ் படை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடவடிக்கை மற்றும் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்துவது, குற்றமிழைத்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவது ஆகியவையும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இத்தகைய மோசடி சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் தகவல்களைப் பெறுவதற்கும் கிடைக்கப்பெறும் அழைப்புகளின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக “சி.சி.ஐ.டி. ஸ்கேம் ரெஸ்போன்ஸ் சென்டர்“‘ எனும் மையத்தை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று கம்பார் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சூ கியோங் சியோங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.
நடப்பு சூழலுக்கு ஏற்பட சட்ட அமலாக்கங்கள் இருப்பதை உறுதி செய்ய தமது தரப்பு சட்டங்களை மறுஆய்வு செய்வது தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் துணையமைச்சர் தெரிவித்தார்.