ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பள்ளி பஸ் நடத்துநர்கள் உபரி வருமானம் பெற வழி ஏற்படுத்துவீர்- குணராஜ் வேண்டுகோள்

ஷா ஆலம், மார்ச் 19- பள்ளி பஸ் நடத்துநர்கள் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பள்ளி பஸ்களின் பராமரிப்புக்கு அதன் உரிமையாளர்கள் பெரும் தொகையைக் செலவிட்டுள்ள நிலையில் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு ஊக்கமளிக்கும் வகையில் இல்லை என்று அவர் சொன்னார்.

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளி பஸ் மூலம் அல்லாமல் சொந்தமாக பள்ளிக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டுவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஆகவே, பள்ளி பஸ் நடத்துநர்கள் உபரி வருமானம் பெறுவதற்கு ஏதுவாக பஸ்களை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்த போக்குவரத்து அமைச்சு அனுமதிக்க வேண்டும். இதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் பொது தரைப் போக்குவரத்து ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று பரவியது முதல் பல பள்ளி பஸ் நடத்துநர்கள் பெரும் போராட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இது தவிர கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளமும் அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படத்தியுள்ளது என்றார் அவர்.

எனவே. பள்ளி பஸ்களை பயணிகளை ஏற்றுவது அல்லது சிறிய அளவிலான பொருள்களை ஏற்றுவது உள்ளிட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்த அனுமதிப்பதன் வழி அவர்களின் பொருளாதார சுமையைக் குறைப்பதற்கும் பஸ்களுக்கான மாதாந்திர தவணைக் கட்டணத்தை செலுத்துவதற்கும் உதவ முடியும் என அவர் மேலும் சொன்னார்.


Pengarang :