சிப்பாங், மார்ச் 27 – கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் மின் சிகரெட் (வேப்பிங்) உள்ளிட்ட புகைபிடிக்கும் பொருட்களை வைத்திருப்பதைத் தடை செய்வது தொடர்பான புதிய சட்ட மசோதா வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்தார்.
இந்த சட்ட நகலை இறுதி செய்யும் பணியில் சட்டத் துறை தலைவர் அலுவலகம் தற்போது ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி முடிவடையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். பின்னர் அதை நான் சுகாதாரம் மற்றும் நுட்ப நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் தாக்கல் செய்வேன் என்று இங்கு தேசிய அளவிலான மை சாம்பியன் சமூக சுகாதார முகவர் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்த சட்ட மசோதா தாக்கல் தொடர்பான அறிவிப்பை கைரி பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியிட்டார். எதிர்கால சந்ததியினர் சிகரெட் மற்றும் புகைபிடிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதை குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏனெனில் அவற்றின் பயன்பாடு புற்றுநோய் முக்கிய காரணமாக விளங்குவதோடு புற்றுநோய் தொடர்பான 22 சதவிகிதம் இறப்புகளுக்கு புகைப் பழக்கம் மூலகர்த்தாவாக உள்ளது.
முன்னதாக இந்நிகழ்வில் உரையாற்றிய கைரி, சிகரெட் தொடர்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதானது, மலேசியர்களிடையே புகைப்பழக்கத்தை நிறுத்தும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த சுகாதார அமைச்சு எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்றாக விளங்குகிறது என்று கூறினார்.
2005 ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பது சட்டப்படி குற்றம் என்று புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறோம்.
உண்மையில் இந்த அமலாக்கம் சவாலாக இருக்கும். இத்தகைய இளையோர் பெரியவர்களிடம் சிகரெட் வாங்கச் சொல்வதைத் தடுக்க சட்டம் எதுவும் இல்லை.
ஆனால், இது அடுத்த தலைமுறை புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான முயற்சியின் முதல் படி என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.