ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் 13 லட்சம் சிறார்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 28– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 37 விழுக்காட்டினர் அல்லது 13 லட்சத்து 12 ஆயிரத்து 205 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை இதுவாகும் என்று கோவிட்நாவ் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதனிடையே, பெரியவர்களில் 1 கோடியே 56 லட்சத்து 32 ஆயிரத்து 112 பேர் அல்லது 66.4 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 48 ஆயிரத்து 963 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.7 விழுக்காட்டினருக்கு அல்லது 2 கோடியே 32 லட்சத்து 25 ஆயிரத்து 157 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

.பன்னிரண்டு முதல் 17 வயதான இளையோரில் 91.6 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 48 ஆயிரத்து 821 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும், 94.7 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 46 ஆயிரத்து 103 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் 24,254 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 6,622 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 818 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 16,814 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 87 லட்சத்து 1 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 34 மரணங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :