ஷா ஆலம், ஏப் 14- அண்மைய சில தினங்களாக பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று அதிகரித்து 10,052 ஆக உயர்வு கண்டது.
இந்நோயினால் நேற்று 22 பேர் மரணமடைந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நேற்று கோவிட்-19 நோயிலிருந்து மொத்தம் 15,893 பேர் குணமடைந்ததாகக் கூறிய அவர், இதன் வழி இத்தொற்றிலிருந்து முற்றாக விடுபட்டவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 96 ஆயிரத்து 656 ஆக உயர்வு கண்டுள்ளது என்றார்.
இந்நோய் கண்டவர்களில் 117,465 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 367 பேர் பி.கே.ஆர்.சி.எனப்படும் கோவிட்-19 நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் 2,599 பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
நேற்று வரை 161 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 99 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
மூன்றாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 0.65 விழுக்காடாக அல்லது 65 பேராக உள்ள வேளையில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பை 9,987 பேர் அல்லது 99.35 விழுக்காட்டினர் கொண்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
நேற்று மொத்தம் 15,132 பேர் நோயிலிருந்து குணமடைந்தனர். இதன் வழி இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 41 லட்சத்து 28 ஆயிரத்து 963 ஆக பதிவாகியுள்ளது என்றும் அவர் சொன்னார்.
நேற்று பதிவான 3 நோய்த் தொற்று மையங்களுடன் சேர்த்து நாட்டில் தீவிரமாக உள்ள தொற்று மையங்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக வருமாறு-
பிரிவு 1- 5,715 சம்பவங்கள் ( 56.85 விழுக்காடு)
பிரிவு 2- 4,272 சம்பவங்கள் (42.50 விழுக்காடு)
பிரிவு 3- 31 சம்பவங்கள் (0.31 விழுக்காடு)
பிரிவு 4- 17 சம்பவங்கள் (0.17 விழுக்காடு)
பிரிவு 5- 17 சம்பவங்கள் (0.17 விழுக்காடு)