ECONOMYSELANGOR

மக்கள் சுயகாலில் நிற்பதை ஊக்குவிக்கும் ஐ.எஸ்.பி. திட்டம்- நோன்புப் பெருநாளுக்கு பின்னர் தொடங்கும்

கோம்பாக், ஏப் 18– பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்ட இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) எனப்படும் பரிவுமிக்க சிலாங்கூர் அர்ப்பணிப்புத் திட்டம் நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் தொடங்கப்படும்.

மக்கள் மாநில அரசை சார்ந்திராமல் சுயகாலில் நிற்பதற்கு ஏதுவாக அவர்களின் ஆக்கத் திறனை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு உதவிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் நாம் மாநிலத்தின் வளங்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டோம். 2013 ஆம் ஆண்டில் கேட்டதை கொடுத்ததன் மூலம் மக்களுக்கு நாம் உதவினோம். 2018 இல் ஒவ்வொரு திட்டத்திலும் மக்களின் ஆற்றலை மெருகூட்ட விரும்புகிறோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெற்ற கோம்பாக் தொகுதி கெஅடிலான் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஐ.எஸ்.பி. திட்டத்தின் வழி அதிகமான மக்கள் பலன் பெறுவர். கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னையத் திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) வழி சுமார் 30,000 பேர் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பும் கிட்டும் என்று அவர் சொன்னார்.

முன்பு துனாஸ் திட்டத்தை அமல்படுத்தினோம். இப்போது அனிஸ் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இந்த அனிஸ் திட்டத்தின் வழி சமூக நல இல்லங்களை கண்காணிக்கவும் பராமரிப்பாளர்களை பயிற்றுவிக்கவும் இயலும். இதன் மூலம் சிறார் சித்திரவதை சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.


Pengarang :