NATIONAL

முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து சீராக உள்ளது

கோலாலம்பூர், ஏப் 29- இன்று பிற்பகல் 12.30 மணி நிலவரப்படி நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சீராக உள்ளது.

எனினும், விபத்து காரணமாக ஓரிரு இடங்களில் சிறிது நெரிசல் காணப்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்) கூறியது.

விபத்து காரணமாக வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் ஜூரு முதல் பிறை வரையிலானப் பகுதி, ஜோகூரின் புக்கிட் காம்பீர் முதல் பாகோ வரையிலான பகுதியில் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன என்று எல்.எல்.எம் பேச்சாளர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
மாநகரிலிருந்து வெளியேறும் பகுதிகளில் உள்ள டோல் சாவடிகளிலும் போக்குவரத்து சீராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஜாலான் டூத்தா, சுங்கை பீசி, கோம்பாக் டோல் சாவடிகளில் இதுவரை போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை என்று அவர்  சொன்னார்.

எனினும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக பெரும்பாலோர் இன்று மாலை சொந்த ஊர்களுக்கு புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுவதால் அப்போது நிலைமையில் மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது என்றார் அவர்.


Pengarang :