ஷா ஆலம்,மே 4- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்த ஈராண்டுகளாக நடத்தப்படாமலிருந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு இம்முறை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும். எனினும், இவ்விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை நடத்துவீர்களா என்று எங்களை பலர் கேட்கின்றனர். செனான்டோங் ஐடில்பித்ரி நிகழ்வை நடத்துவதற்கு தொடக்கத்தில் நாம் திட்டமிடவில்லை. ஆகவே, அது குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கருத்தை நாம் பெறவேண்டியுள்ளது என்றார் அவர். எனினும், மாவட்ட நிலையில் இத்தகைய பொது உபசரிப்பை நடத்துவது அவசியம் எனக் கருதுகிறோம். இதன் மூலம் அதிகமான மக்களை சந்திக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். நேற்று, இங்குள்ள தனது அதிகாரத்துவ இல்லத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை நடத்தியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இதனிடையே, சிறப்பு சுகாதாரம் உள்பட புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்றத் தகவலையும் அவர் வெளியிட்டார்.