சிப்பாங், மே 8- பிரேசிலின் காக்சியாஸ் டூ சுல் நகரில் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி.இளமாறன், தோக்கியோவில் வரும் 2025 இல் நடைபெற உள்ள அடுத்த காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளார். 22 வயதான இளமாறன், சமீபத்தில் 84 கிலோவுக்குட்பட்ட ஆண்களுக்கான குமிடே கராத்தே போட்டியில் உக்ரேனிய தடகள வீரர் மக்னோ ஓலெக்சானரிடம் தோல்வியடைந்து தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். நான் பிரேசிலுக்குச் செல்வதற்கு முன்பு இப்போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெறுவதற்காக உழைத்தேன். உக்ரேனிய கராத்தே வீரருக்கு எதிராக என்னால் முடிந்தவரை போராடினேன். ஆனால் எனது முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், நான் முயற்சியைக் கைவிடவில்லை. 2025 தோக்கியா போட்டியில் தங்கத்தைப் பெற முயற்சிப்பேன் என்றார் அவர். நேற்று,கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார். 24 வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில், 84 கிலோவுக்குட்பட்ட ஆண்களுக்கான குமிடே போட்டியின் இறுதி ஆட்டத்தில் இளமாறன் உக்ரைனின் ஒலெக்சானரிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். முன்னதாக, ஜோகூரில் பிறந்த கராத்தே வீரரான இளமாறன்,பயிற்சியாளர் சோக் காங் யூ மற்றும் அணி நிர்வாகி சான் கோக் ஷெங் ஆகியோருடன் மதியம் 2.54 மணியளவில் பிரேசிலில் இருந்து கோலாலம்பூர் வந்தடைந்தார். மலேசிய காது கேளாதோர் விளையாட்டு சங்கத்தின் ஆலோசகர் டத்தோ நைம் முகமட் அவர்களை வரவேற்றார். இதற்கிடையில், டோக்கியோவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் நாட்டிற்காக தங்கம் வெல்லும் கனவை நனவாக்க இளமாறன் தொடர்ந்து போராடுவார் எனத் தாம் நம்புவதாக நைம் கூறினார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/05/FW1237341_PTJ16_070522_KARATE_PEKAK-lpr-960x665.jpg)