கோல லங்காட், மே 8- மனிதர்களுக்கிடையே உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக அனைத்து இனத்தினரும் இன, மத பேதங்களைக் கடந்து ஒருவரின் பெருநாளை மற்றவர் கொண்டாடாட வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியாவில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இத்தகைய நடவடிக்கைகள் பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.
இந்தியர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் வருடப் பிறப்பு விழாவான சித்தரைப் புத்தாண்டை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடினைத் தாம் பெரிதும் பாராட்டுவதாக அவர் சொன்னார்.
வேற்று இனத்தவராக இருந்த போதிலும் அதிக சிரத்தை எடுத்து இந்த விழாவை அவர் ஏற்பாடு செய்துள்ளார். அவரின் இந்த முயற்சியை மற்றத் தலைவர்களும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என கணபதிராவ் குறிப்பிட்டார்.
மோரிப் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள மோரிப் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புனித மாதமாக விளங்கும் சித்திரை மாதத்தின் மத்தியில் இந்த சித்திரைப் புத்தாண்டு விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும் என்றும் அவர் தமதுரையில் கூறினார்.