சிரம்பான், மே 15- நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 8 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட 18 வது ஒப் செலாமாட் நடவடிக்கையின் போது நாடு முழுவதும் 350 வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் பதிவாகின.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 790 ஆக இருந்ததாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு மற்றும் சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் டத்தோ அய்டி இஸ்மாயில் கூறினார்.
இவ்வாண்டில் வீடு புகுந்து திருடும் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதானது தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் பாதுகாக்கும் விஷயத்தில் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார்.
தங்கள் வீடுகளில் பாதுகாப்பு அலாரங்கள் மற்றும் இரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியது மற்றும் அமலாக்கத் தரப்பினரின் ரோந்து நடவடிக்கை ஆகியவையும் இந்த குற்றச்செயல் எண்ணிக்கை குறைவுக்கு வழி வகுத்துள்ளது என்றார் அவர்.
போலீஸ் தரப்புக்கு தகவல் கொடுத்து உதவியவர்கள் மற்றும் தங்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்தவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தேசிய போலீஸ் படைத் தலைவர் கிண்ண செப்பாக் தக்ராவ் போட்டியை முடித்து வைக்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.