ஷா ஆலம், மே 22- கோத்தா அங்கிரிக் தொகுதி ஏற்பாட்டில் இன்று இங்கு நடைபெற்ற நோன்புப் பெருநாள் உபசரிப்பில் பிற்பகல் 1.00 மணி வரை சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர்.
இந்த ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் மாலை 3.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தடைபட்டிருந்த நிலையில் இவ்வாண்டு இந்நிகழ்வை பெரிய அளவில் நடத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக நஜ்வான் கூறினார்.
தங்களின் பழைய நண்பர்களைச் சந்திப்பதற்குரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து இந்நிகழ்வுக்கு வந்தவர்கள் மகிழ்ச்சியடைந்ததைக் காண முடிந்தது.வருகையாளர்களின் வசதிக்காக இந்த மண்டபத்தை இந்த பொது உபசரிப்புக்கு தேர்வு செய்தேன் என்று அவர் தெரிவித்தார்.
தொகுதி மக்களிடையே நட்புறவை வளர்ப்பதற்கும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கும் இந்த நிகழ்வு ஒரு களமாக விளங்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் தன் துணைவியாருடன் இணைந்து பண அன்பளிப்புகளை வழங்கினர்.