ஷா ஆலம், மே 25- பேரிடரின் போது மீட்புப் பணிகளுக்கு உதவும் நோக்கில் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பின் (செர்வ்) இலிட் குழுவை உருவாக்கும் மாநில அரசின் முயற்சியை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வரவேற்றுள்ளது.
பேரிடரின் போது பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்வதற்கும் தங்களின் சுமையைக் குறைப்பதற்கும் அதிகமான தன்னார்வலர்கள் தேவைப்படுவதாக மாநில தீயணைப்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமீஸ் கூறினார்.
சிலாங்கூர் மாநில தீயணைப்புத் துறையில் 1,700 வீரர்கள் உள்ளனர். எனினும், கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ளம் போன்ற பெரிய அளவிலான பேரிடர்கள் ஏற்படும் போது அந்த மிகவும் சிறியதாகி விடுகிறது என்ற அவர் சொன்னார்.
எங்களின் பணியில் உதவ மேலும் அதிகமான தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர். இத்தகைய தன்னார்வலர் திட்டத்தை முன்னெடுத்துள்ள சிலாங்கூர் மாநில அரசுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
புக்கிட் ஜெலுத்தோங்கிள்ள உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமையகத்தில் இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மானை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த செர்வ் இலிட் தன்னார்வலர் குழுவுக்கு மிகச் சிறந்த பயிற்சிகளை வழங்க தங்களிடமுள்ள அனைத்து வசதிகள் மற்றம் ஆற்றலை பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.