ECONOMYHEALTHSELANGOR

இலவச பரிசோதனை- கடும் நோய் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல பணிக்கப்படுவர் 

கிள்ளான், மே 25- “சிலாங்கூர் சாரிங்“ எனப்படும் மாநில அரசின் இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்து கொள்வோர் கடும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக சுகாதார மையம் அல்லது நிபுணத்துவ மருத்துவமனைக்கு செல்லும்படி பணிக்கப்படுவர்.

கடுமையான நோய் இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி பணிக்கும் உத்தரவு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 48  மணி நேரத்திற்குள் செலங்கா செயலி வாயிலாக வழங்கப்படும் என்று சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

குறிப்பிட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்கு உண்டாகும் மருத்துவச் செலவினங்களை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் அவர் சொன்னார்.

ஒருவருக்கு ஆபத்தான நோய் இருப்பது அல்லது நோய் பீடிக்கும் சாத்தியம் உள்ளது கண்டறியப்பட்டால் எங்களுடன் ஒருங்கிணைப்பில் இருக்கும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் மேமோகிராம் மையம் ஆகியவற்றின் நிபுணர்களிடம் அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பப்படுவர்.

சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணரை சந்திப்பதற்கு பொருத்தமான தேதியை சம்பந்தப்பட்ட நோயாளி செலங்கா செயலி வாயிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் சாரிங் திட்டம் தொடர்பில் இங்குள்ள விண்ட்ஹாம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட்டும் இந்த செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

வரும் மே 22 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் போது அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள சிலாங்கூர் சுகாதார தன்னார்வலர் குழுவின் (சுக்கா) பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்படும் என்றும் டாக்டர் ஃபர்ஹான் தெரிவித்தார்.


Pengarang :