ECONOMYNATIONAL

கெஅடிலான் தேர்தல்- தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஞாயிறன்று வேட்பு மனுத்தாக்கல்

கோலாலம்பூர், மே 25- இம்மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிருந்த கெஅடிலான் கட்சியின்  மத்திய தலைமைத்துவ மன்றம், இளைஞர் பிரிவு மற்றும் மகளிர்ப் பிரிவின் 20 தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு போட்டியிட தகுதி உள்ள வேட்பாளர்கள் “அடில்“ செயலியைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக அல்லது பெட்டாலிங் ஜெயா, டிரோப்பிகானாவில் உள்ள பி.கே.ஆர். தலைமையகத்தில் நேரடியாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று பி.கே.ஆர். கட்சியின்  தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

இணையம் வாயிலாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய பின்னிரவு 12.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. பி.கே.ஆர். தலைமையகத்தில் நேரடியாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கான நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை ஆகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த மூன்று பிரிவுகளின் மத்திய தலைமைத்துவ மன்ற உறுப்பினர் பதவிகளுக்கு இம்முறை அதிகமானோர் போட்டியிடுவர் என எதிர்பார்க்கிறோம். இதன் வழி வரும் 15 வது பொதுத் தேர்தலுக்கு கட்சி தன்னைத் தயார் படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு தலைமைத்துவ மன்றத்தின் 20 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெறும் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் மாநாட்டில் நடைபெறும். தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.

கட்சியின் தேசிய தலைமைத்துவ  மன்ற உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 25 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பி.கே.ஆர். கட்சியின் தேசிய  மாநாட்டில் நடைபெறும்.


Pengarang :