கோத்தா பாரு, மே 26- வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாயாரை அவரின் 14 வயது மகன் கத்தியால் சரமாரியாகக் குத்தினான். இச்சம்பவத்தில் 41 வயதுடைய அந்த மாது பலத்த காயங்களுக்குள்ளானார்.
பாசீர் பூத்தே, புக்கிட் யோங்கிலுள்ள ஒரு வீட்டில் நேற்றிரவு 11.45 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கிளந்தான் மாநில குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ முகமது நோர் யாஷிட் கூறினார்.
வீட்டின் அறையில் தன் மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த அந்த மாது நெஞ்சில் வலி ஏற்பட்டதை உணர்ந்து உறக்கத்திலிருந்து விழித்ததாக அவர் சொன்னார்.
நெஞ்சில் கத்தி சொருகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அம்மாது, வீட்டின் வரவேற்பறையில் உறங்கிக் கொண்டிருந்த தன் கணவரை அழைத்துள்ளார். சற்று நேரத்தில் நினைவிழந்த அம்மாதுவை அவரின் கணவர் உடனடியாக பாசீர் பூத்தே தெங்கு அனிஸ் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார் என்று டத்தோ முகமது நோர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
அதிக இரத்தம் வெளியேறிய நிலையில் அம்மாது தற்போது மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கத்திக் குத்து காரணமாக அம்மாதுவின் நுரையீரலில் துவாரம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
அம்மாதுவின் மூன்றாவது மகனான அந்த சந்தேகப்பேர்வழி வீட்டின் சமையலறையில் உள்ள கத்தியைக் கொண்டு தன் தாயாரைத் தாக்கியது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த இரு தினங்களாக காய்ச்சல் கண்டிருந்த அந்த சிறுவனை அவரின் தாயார் கூடுதல் அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 326 வது பிரிவின் கீழ் அச்சிறுவன் விசாரணக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.