ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசின் ஏற்பாட்டில் ஹோட்டல், சுற்றுலாத் துறைக்காக சிறப்பு வேலை வாய்ப்புத் திட்டம்

ஷா ஆலம், ஜூன் 12- ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறைக்காக சிறப்பு வேலை வாய்ப்புத் திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் அமல்படுத்தவுள்ளது.

அவ்விரு துறைகளிலும் நிலவி வரும் சுமார் 6,000 காலியிடங்ளை நிரப்புவதற்காக இந்த வேலை வாய்ப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

சிக்கன தங்கும் விடுதி நடத்துநர்கள் (பட்ஜெட் ஹோட்டல்) உள்பட இவ்விரு துறைகள் சார்ந்த நடத்துநர்களிடமிருந்து ஆள்பலம் தொடர்பான கோரிக்கையை தாங்கள் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவது தொடர்பில் சிலாங்கூரிலுள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களிடமிருந்தும் நாங்கள் கோரிக்கைகளைப் பெற்றுள்ளோம். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இத்துறைகள் முடக்கம் கண்டப் பின்னர் ஆள்பலப் பிரச்னையை இத்துறைகள் எதிர்நோக்கி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலை வாய்ப்புத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். இத்துறைகள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு ஏதுவாக இவ்விகாரத்தில் சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழுவுடனும் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :