கோலாலம்பூர், ஜூன் 14– பேரிடர் மற்றும் அவசரகாலத்தின் போது ஏற்படக்கூடிய தேவையை கருத்தில் கொண்டு இரத்த கையிருப்பை அதிகரிப்பதற்காக மலேசிய செம்பிறைச் சங்கத்துடன் தேசிய இரத்த மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இரத்ததான முகாம்களை அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்வதிலும் திட்ட அமலாக்கத்திலும் செம்பிறைச் சங்கம் மற்றும் தேசிய இரத்த மையத்துடனான இந்த ஒத்துழைப்பு மேலும் ஆக்ககரமான பலனைத் தரும் என்று செம்பிறைச் சங்கத்தின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ துங்கு புத்ரி இந்தான் சபினாஷ் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா கூறினார்.
சமூக சேவை சுகாதாரத் திட்டங்கள் வாயிலாக இரத்த தானத்தை ஒரு கலாசாரமாக ஆக்கும் நடவடிக்கையில் செம்பிறைச் சங்கம் கடந்த 48 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், நமது திட்டங்கள் ஏற்புடைய நிலையில் இல்லை. பிற நாடுகள் நம்மை விட மேலும் ஆக்ககரமான முறையில் செயல்படுகின்றன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழி மாநில மற்றும் தேசிய நிலையில் இரத்த சேகரிப்பு இயக்கங்கள் மேலும் ஏற்புடைய வகையில் சீராகவும் அதிகமானதாகவும் இருக்கும் என நம்புகிறோம் என்றார் அவர்.
இன்று அனுசரிக்கப்படும் அனைத்துலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. துங்கு புத்ரி சபிஷாஸூம் தேசிய இரத்த மையத்தின் சார்பில் டாக்டர் அஃபிபா ஹசானும் இதில் கையெழுத்திட்டனர்.
நாடு முழுவதும் ஆயிரம் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக சுமார் 2,000 பை இரத்தம் தினசரி தேவைப்படுவதாக டாக்டர் ஹஃபிபா கூறினார்.