ECONOMYHEALTHSELANGOR

டிங்கி பரவலுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு தேவை- சித்தி மரியா வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 15– டிங்கி காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு ஏதுவாக மாநில மக்கள் தங்கள் வீட்டு சுற்றுப்புறங்களில் உயர்ந்தபட்ச தூய்மையைப் பேண வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

டிங்கி நோயின் அபாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் கொண்டிருப்பது அவசியம் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

இத்தகைய விழிப்புணர்வின் மூலமே ஏடிஸ் கொசுக்கள் பரவும் இடங்களை அடையாளம் கண்டு அழிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள இயலும் என்று அவர் சொன்னார்.

ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியைத் தடுப்பது மற்றும் நோய்ப் பரவலை முறியடிப்பதில் முழுமையான விழிப்புணர்வை கொண்டிருப்பதன் மூலம் மனிதர்களால் டிங்கி நோயை கட்டுக்குள் கொண்டு வர இயலும் என்றார் அவர்.

குப்பைகளை குப்பைத் தொட்டியில் வீசும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்று 2022 ஆம் ஆண்டு ஆசியான் டிங்கி தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 11 ஆம் தேதி வரை 13,438 டிங்கி சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த எண்ணிக்கையில் 2,257 சம்பவங்களுடன் கிள்ளான் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து பெட்டாலிங் (3,038 சம்பவங்கள்), காஜாங் (1,338 சம்பவங்கள்), சுங்கை பூலோ (1,324 சம்பவங்கள்), பெட்டாலிங் (1,169 சம்பவங்கள்) ஆகியவை உள்ளன என்றார் அவர்.

டிங்கி தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் மாநில அரசு 50 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாகவும் சித்தி மரியா குறிப்பிட்டார்.


Pengarang :