ஷா ஆலம், ஜூன் 16- செரெண்டா, கம்போங் டத்தோ ஹருணில் உள்ள கூடைப்பந்து அரங்கை தரம் உயர்த்துவதற்கு மாநில அரசு 340,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
விளையாட்டாளர்களின் வசதிக்காக அந்த அரங்கின் கூரை மற்றும் இதர வசதிகளை சரி செய்வதற்கான இந்த ஒதுக்கீடு கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.
கம்போங் பாரு குடியிருப்பாளர்களுக்கு பிடித்தமான விளையாட்டாக கூடைப்பந்து விளங்குகிறது. தேசிய நிலையிலான விளையாட்டாளர்கள் உள்பட பல தலைசிறந்த விளையாட்டாளர்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த அரங்கம் முறையாக பராமரிக்கப்படும் என்பதோடு நாட்டில் தலைசிறந்த விளையாட்டாளர்களை உருவாக்குவதற்கும் இது உதவி புரியும் என தாம் நம்புவதாக அவர் சிலாங்கூர்கினியிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த உதவிக்கு மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட கிராமத் தலைவர் எண்டி பா, இக்கிராம மக்களுக்கு மேலும் அதிகமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
இந்த உதவியின் மூலம் இப்பகுதி மக்கள் சௌகர்யமான சூழலிலும் பாதுகாப்பாகவும் இந்த அரங்கை பயன்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.