கோலாலம்பூர், ஜூன் 16- இன்று 2021 ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு ஏதுவாக தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தும்படி அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக சிலாங்கூரைச் சேர்ந்தவர்களுக்கு அவர் ஆலோசனை கூறினார்.
இன்று தேர்வு முடிவுகளைப் பெற்ற 2021 ஆம் ஆண்டு எஸ்.பி.எம். மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பான எதிர்காலத்திற்காக வாழ்நாள் முழுவதும் கற்கும்படி அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதலை வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார்.
கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் 9,696 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ஏ நிலையில் சிறப்பான தேர்ச்சியைப் பதிவு செய்தனர்.