ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 :சுமார் 13 லட்சம் சிறார்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜூன் 21– “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 12 லட்சத்து 99 ஆயிரத்து 348 சிறார்கள் அல்லது 36.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும், ஐந்து முதல் பதினோரு வயது வரையிலான அச்சிறார்களில் 49 விழுக்காட்டினர் அல்லது 17 லட்சத்து 37 ஆயிரத்து 987 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இது தவிர 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 29 லட்சத்து 11 ஆயிரத்து 081 பேர் அல்லது 93.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகவும் 30 லட்சத்து ஆயிரத்து 413 பேர் அல்லது 96.5 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும்  பெற்றுள்ளதாக அது தெரிவித்தது.

பெரியவர்களில் 68.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 61 லட்சத்து 29 ஆயிரத்து 557 பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 2 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 677 பேர் அல்லது 97.8 விழுக்காட்டினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது.

குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்ற பெரியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 32 லட்சத்து 82 ஆயிரத்து 208 ஆக அல்லது 99 விழுக்காடாக உள்ளது.

நேற்று நாடு முழுவதும் 6,772 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 538 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 5,016 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 1,218 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதனுடன் சேர்த்து பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 11 லட்சத்து 51 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நேற்று புதிதாக 2,093 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது. மேலும் சிலாங்கூர், பினாங்கு மற்றும் கெடாவில் தலா ஒரு மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.


Pengarang :