செலாயாங், ஜூன் 21 – எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் (ஒருங்கிணைக்கப்பட்ட) கழகம் தனது பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டில் பாதிக்கு மேல் மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் மாணவர் திட்டங்களை மேற்கொள்ளச் செலவிட்டுள்ளது.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் பெற்றோர்-ஆசிரியர் சங்கம் திட்டங்களுக்கும் அவர்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் நிதியளித்துள்ளதாக எம்.பி.ஐ. நிறுவன சமூகப் கடப்பாட்டுப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
ஒழுகும் கூரைகள், சேதமடைந்த கழிவறைகளை பழுது பார்ப்பது, பள்ளி கேன்டீன்களில் நாற்காலிகள், மேஜைகளை மாற்றுவது, மடிக்கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களுக்கான தேவை தொடர்பில் விண்ணப்பங்களைப் பெற்றோம்.
எங்களிடம் இன்னும் சிறு அளவில் நிதி உள்ளது. தேவைப்படும் பள்ளிகளுக்கு உதவி வழங்கத் தயாராக உள்ளோம். எனவே பள்ளி நிர்வாகத்தினர் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் கூறினார்.
நேற்று ஐடியல் ஹைட் இடைநிலைப் பள்ளியின் அணுகல் மையத்தின் பயன்பாட்டிற்காக ஐந்து மடிக்கணினிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார் .
தாமான் டெம்ப்ளர் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்சான் மற்றும் பள்ளியின் முதல்வர் ஜரீனா மாமுட் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டிற்கான சிலாங்கூரில் மாணவர் மற்றும் பள்ளித் திட்டங்களை மேற்கொள்ள எம்.பி ஐ. பத்து லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது, இதில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 500,000 வெள்ளியும் பெற்றோர் ஆசிரியர் சங்க நடவடிக்கைகளுக்கு 500,000 வெள்ளியும் செலவிடப்படும்.