ECONOMYSELANGOR

வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் முதியவர்  மரணம்- பந்திங்கில் சம்பவம்

ஷா ஆலம், ஜூன் 24– பந்திங், கம்போங் கஞ்சோங் டாராட் கிராமத்தில் பலகை வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 66 வயது முதியவர் ஒருவர் உடல் கருகி மாண்டார்.

நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த வீட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி தீயில் எரிந்து சாம்பலானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு துணை இயக்குநர் ஹபிஷாம் முகமது நோர் கூறினார்.

இத்தீவிபத்து தொடர்பில்  நேற்றிரவு 8.17 மணிக்கு தகவல்  கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் அவர் சொன்னார்.

அவ்விடத்தை  அவர்கள் அடைந்த போது 40 அடி அகலமும் 50 அடி நீளமும் கொண்ட அந்த வீட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி தீயில் அழிந்து விட்டது. கடும் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் இரவு 8.43 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

எனினும், மாலை முதல் வீட்டிலிருந்த தன் கணவரைக் காணவில்லை என அந்த வீட்டின் உரிமையாளரான பெண்மணி ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்ட அந்த வீட்டில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அச்சோதனையின் போது அவ்வீட்டின் பின்புறத்தில் ஆடவர் ஒருவர் இறந்து கிடப்பதை அவர்கள் கண்டனர் என்று ஹபிஷாம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து வெளியேற முயன்ற போது அந்த முதியவர் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :