ECONOMY

அகதிகளுக்கான அட்டை வைத்திருந்தவர்கள் பயன்படுத்திய ஏழு வாகனங்கள் பறிமுதல்

பாடாங் பெசார், ஜூன் 28– அகதிகள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) தூதரக அட்டையை வைத்திருந்தவர்கள் பயன்படுத்திய ஏழு வாகனங்களை சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) பறிமுதல் செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அந்நிய வாகனமோட்டிகளுக்கு எதிரான ஒப்ஸ் பேவா நடவடிக்கையில் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெர்லிஸ் மாநில ஜே.பி.ஜே.இயக்குநர் ஃபாத்திமா முகமது அலி பியா கூறினார்.

லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஆறு மியன்மார் பிரஜைகள் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் அடங்கிய அந்த நபர்களுக்கு குற்றப்பதிவும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் போது மூன்று மோட்டார் சைக்கிள்கள், மூன்று கார்கள் மற்றும் ஒரு லோரி பறிமுதல் செய்யப்பட்டன. 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 64 மற்றும் 26(1)வது பிரிவுகளின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வெள்ளி வரையிலான அபராதம் மற்றும் ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

லைசென்ஸ் இல்லாத நிலையில் அந்நிய நாட்டினர் தங்கள் வாகனங்களை ஒட்டுவதற்கு அனுமதி வழங்கிய வாகன உரிமையாளர்களுக்கும் குற்றப்பதிவு வழங்கப்பட்டது என்றார் அவர்.


Pengarang :