கொலும்பு, ஜூன் 28- எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளும்படி தனது அதிகாரிகளுக்கு இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
நிலுவையில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் கடன்களை திரும்பச் செலுத்த மத்திய வங்கியின் கவர்னர் ஒப்புக் கொண்டுள்ளதாக அதிபரின் செய்திப் பிரிவை மேற்கோள் காட்டி ஷின்ஜூவா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளுக்கு 70 கோடி அமெரிக்க டாலரைச் செலுத்த வேண்டியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிபொருள் துறைக்கான அமைச்சர் கஞ்சனா விஜேசேகரான கூறினார்.
இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அடுத்து வரும் மாதங்களில் எண்ணெய் விநியோகத்தை நிர்வகிப்பது தொடர்பான திட்டத்தை முன்வைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்றிரவு தொடங்கி வரும் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் வாகனங்களுக்கு மட்டும் எரிபொருள் வழங்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கூறியுள்ளார்.