ஷா ஆலம், ஜூலை 4- இவ்வார இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கரை முதல் கட்ட நெடுஞ்சாலை (எல்.பி.டி.1) ஆகியவற்றை 24 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என அனி பெர்ஹாட் நிறுவனம் கணித்துள்ளது.
வரும் ஜூலை 8 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையை 16 லட்சத்து 40 ஆயிரம் வாகனங்களும் எல்.பி.டி.1 நெடுஞ்சாலையை 704,000 வானங்களும் பயன்டுத்தும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரட்ஸிமா முகமது ரட்ஸி கூறினார்.
இவ்வாண்டு தொடங்கி இவ்விரு நெடுஞ்சாலைகளிலும் வார இறுதியில் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. கோலாலம்பூர்-காராங் நெடுஞ்சாலையை சராசரி 161,000 வாகனங்களும் எல்.பி.டி.1 நெடுஞ்சாலையை 65,000 வாகனங்களும் பயன்படுத்தின என்று அவர் சொன்னார்.
வார இறுதியில் வாகன எண்ணிக்கை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை தயார் நிலையில் வைப்பது மற்றும் கூடுதல் தடங்களை போக்குவரத்துக்கு திறப்பது போன்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.
நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளதை உறுதி செய்யும் அதேவேளையில் ஓய்வுப் பகுதிகளில் சுத்தம் பராமரிக்கப்படுவதும் உறுதி செய்யப்படும் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
வாகனமோட்டிகளின் சீரான பயணத்திற்கு உதவும் வகையில் பயண பரிந்துரை அட்டவணையை தமது தரப்பு வெளியிடும் எனவும் அவர் கூறினார்.