ECONOMYSELANGOR

முதியோருக்கு வெ.500 வெள்ளி உதவித் தொகையா? அது பொய்ச் செய்தி- அமைச்சு விளக்கம்

கோலாலம்பூர், ஜூலை 7- முதியோருக்கு மாதம் 500 வெள்ளி உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் இணையம் வாயிலாக வரவேற்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை சமூக நல இலாகா மறுத்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை எளிதில் நம்பிவிட வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

சமூக நலத் துறை அமல்படுத்தியுள்ள உதவித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள  www.jkm.gov.my என்ற அத்துறையின் அகப்பக்கத்தை நாடும்படி அது கேட்டுக் கொண்டது.

பொதுமக்கள் பொறுப்புணர்வுமிக்க மற்றும் விவேகமான இலக்கவியல் பிரஜைகளாக இருக்க வேண்டும் என்றும் சமூக நலத் துறை வலியுறுத்தியது.


Pengarang :