ஷா ஆலம், ஜூலை 12- பெர்மாத்தாங் தொகுதி ஏற்பாட்டில் சிலாங்கூர் இலக்கவியல் தொழில்முனைவோர் திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சிடேக் எனப்படும் சிலாங்கூர் தகவல் தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கழகத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் திட்டத்தில் 200 தொழில்முனைவோர் பங்கேற்பர் என தாங்கள் எதிர்பார்ப்பதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு இணையம் வாயிலாக கூடுதல் வருமானம் பெறுவதற்குரிய வாய்ப்புகள் குறித்து விளக்கப்படும் என்று அவர் சொன்னார்.
நேரடி விற்பனைக்கு பதிலாக இணையம் வாயிலாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை வணிகர்கள் பெறும் நோக்கில் லாஸாடா, ஷோப்பி, ஜே டி போன்ற நிறுவனங்களையும் இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.
இணையம் வாயிலான விற்பனையின் மூலம் முன்பைக் காட்டிலும் அதிகம் வருமானத்தை ஈட்டுவதற்குரிய வாய்ப்பு நமது தொழில்முனைவோருக்கு கிட்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இணையம் வாயிலாக வர்த்தகம் புரிவதற்கு பல்வேறு தளங்கள் இருந்த போதிலும் பெரும்பாலான வணிகர்கள் இன்னும் அந்த மாற்றத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளாமலிருப்பதாகவும் அவர் சொன்னார்.