ECONOMYPENDIDIKANSELANGOR

யுனிசெல் தாதியர் பயிற்சி மாணவர்களுக்கு ஏற்பாட்டு ஆதரவு- ஸ்ரீ கோத்தா மருத்துவ மையம் வழங்குகிறது

ஷா ஆலம், ஜூலை 14- சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் (யுனிசெல்) தாதியர் துறையில் டிப்ளோமா கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஸ்ரீ கோத்தா மருத்துவ மையம் ஏற்பாட்டு ஆதரவை வழங்கியுள்ளது.

இந்த ஏற்பாட்டு ஆதரவின் வழி அத்துறை சார்ந்த மாணவர்களுக்கு வாழ்க்கைச் செலவினப் படியாக மாதம் 550 வெள்ளியும் சிறப்பு உபகாரச் சம்பளமும் அந்த மருத்துவ மையத்தின் மூலம் வழங்கப்படும்.

இது தவிர, அந்த மாணவர்கள் கல்வித் தவணை முடியும் வரை சீருடை, தங்கும் விடுதி, தாதியர் பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை உபகாரச் சம்பளத் திட்டத்தின் கீழ்  பெறும் அதே வேளையில் தங்களின் தொழில் பயிற்சியை அந்த மருத்துவ மையத்திலேயே மேற்கொள்வற்குரிய வாய்ப்பும் வழங்கப்படும்.

கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயாவிலுள்ள யுனிசெல் வளாகத்தில் கடந்த 8 ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் வழி இந்த ஏற்பாட்டு ஆதரவு தொடர்பில் இணக்கம் காணப்பட்டது.

யுனிசெல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரெட்சுவான் ஓத்மான் பல்கலைக்கழகத்தின் சார்பிலும் ஸ்ரீ கோத்தா மருத்துவ மையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான் சுவேட் குவானும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

குறைந்த வருமானம் பெறும் பி40 மற்றும் நடுத்தர வருமானம் பெறும் எம்40 தரப்பினர் மருத்துவ துறைகளில் கல்வியைத் தொடர்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக டாக்டர் முகமது ரெட்சுவான் கூறினார்.

கடந்த 2021 கல்வித் தவணை முதல் தாதியர் துறையில் டிப்ளோமா  கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு ஏற்பாட்டு ஆதரவை வழங்கி வரும் ஸ்ரீ கோத்தா மருத்துவ மையத்திற்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :