ஷா ஆலம், ஜூலை 14– கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள ‘விண்டேஜ் சைக்கிள் ஃபன் ரைட்‘ போட்டியில் பங்கேற்க பழைய சைக்கிள் வைத்திருக்கும் பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.
வாகனமில்லா தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த நிகழ்வில் சுல்தான் அப்துல் அஜிஸ் கேலரியில் தொடங்கி ராயல் கிள்ளான் ஹெரிடேஜ் வாக் பகுதியில் முடிவடையும் என்று நகராண்மைக் கழகத்தின் வர்த்தகத் தொடர்புப் பிரிவு இயக்குநர் நோர்பிஸா மாபிஷ் கூறினார்.
காலை 7.00 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வில் அனைத்து மலேசிய பிரஜைகளும் கலந்து கொள்ளலாம் எனக் கூறிய அவர், நிகழ்ச்சியின் பழைமை கருப்பொருளுக்கேற்ப பங்கேற்பாளர்கள் உடைகளை அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் முதல் 200 போட்டியாளர்கள் அதிர்ஷ்டக் குலுக்கலில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர். இது தவிர பழைய சைக்கிள் மற்றும் உடைகளுக்கான பிரிவில் ஆறு பரிசுகளும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
ஆர்வமுள்ளோர் https://forms.gle/KXi3pAP1GWbAC8SH7 என்ற அகப்பக்கம் வாயிலாக வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில் போலீசாரின் டி பேட்டன் தற்காப்பு முறை, மோப்ப நாய்களின் சாகசம், சீருடை கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறும்.
இந்த நிகழ்வு குறித்து மேல் விபரங்கள் பெற விரும்புவோர் 03-33755555 இணைப்பு 1606 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.