ECONOMYNATIONAL

உதவித் தேவைப்படும் தரப்பினருக்கு மட்டும் மானிய சலுகை- அன்வாரின் கருத்துக்கு பிரதமர் ஆதரவு

ஷா ஆலம், ஜூலை 18- இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியச் சலுகை உதவித் தேவைப்படும் தரப்பினருக்கு மட்டுமே கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொருத்தமான வழிமுறையை தமது தரப்பு ஆராய்ந்து வருவதாக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

மாண்புமிகு உறுப்பினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கருத்தை நான் வரவேற்கிறேன். இலக்கு நிர்ணயிக்கப்பட்டத் தரப்பினருக்கான மானியச் சலுகைத் திட்டத்தை நாங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

வசதி உள்ளவர்களும் அனுபவிக்கும் காரணத்தால் மானியத் திட்டத்தினால் அரசாங்கம் பெரும் இழப்பை எதிர்நோக்கி வருவதாக இன்று மக்களவையில் உரையாற்றும் போது பிரதமர் கூறினார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உதவித் தொகையை வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்தது குறித்து போர்ட்டிக்சன் உறுப்பினரான அன்வார் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அணுகுமுறை கடைபிடிக்கப்படும் பட்சத்தில் நம்மால் எண்ணெய் விலையைக் குறைக்க முடியும். இப்போது இந்த சலுகையை டி20 எனப்படும் உயர் வருமானம் பெறும் தரப்பினரோடு அந்நிய நாட்டினரும் அனுபவித்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.


Pengarang :