ECONOMYSELANGOR

உலு பெர்ணமில் கோழிப் பண்ணையை உருவாக்க பி.கே.பி.எஸ். திட்டம்- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், ஜூலை 25- உலு சிலாங்கூர் மாவட்டத்தின் உலு பெர்ணம் பகுதியில் இறைச்சிக் கோழி பண்ணையை உருவாக்க சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு சுழல் முறையின் போதும் 300,000 கோழிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இதன் வழி பி.கே.பி.பி.எஸ் வாயிலாக ஒவ்வொரு சுழல் முறையிலும் உற்பத்தி செய்யப்படும் மொத்த கோழிகளின் எண்ணிக்கை 800,000 ஆக உயரும். தற்போது இந்த எண்ணிக்கை 500,000 ஆக உள்ளது என அவர் சொன்னார்.

தற்போது நெகிரி செம்பிலான கிம்மாஸ் பகுதியில் 400 ஏக்கர் நிலப்பரப்பிலும் கோல லங்காட் செலத்தான் பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பிலும் தானியச் சோளம் பயிரிடுவதற்காக நிலச்சீராக்கப் பணிகளை பி.கே.பி.எஸ். தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் அப்பணி வரும் ஆகஸ்டு மாதம் முற்றுப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று கோழி பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கம்போங் துங்கு உறுப்பினர் லிம் யீ வேய் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, மாநில அரசின் மலிவு விலைத் திட்டத்தின் கீழ் சுமார் 80,000 பேர் பயனடைந்துள்ளதாகவும் இஷாம் தெரிவித்தார்.


Pengarang :