ஷா ஆலம், ஜூலை 25- வரும் 2023 வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) தொடர்பான கருத்துக் கணிப்பில் பங்கேற்பதன் மூலம் அத்திட்டம் தொடர்பான தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும்படி மாநில மக்களை மந்திரி புசார் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரவு செலவுத் திட்டம் முழுமையானதாக இருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம் என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கீழ்க்கண்ட போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இதன் தொடர்பான கருத்துக் கணிப்பில் பங்கு கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்.
வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில் இவ்வாண்டு மற்றும் கடந்தாண்டுகளைப் போலவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரின் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார் அவர்.
தயாரிக்கப்படும் இந்த வரவு செலவுத் திட்டம் மேம்பாடு மற்றும் மக்கள் நலனுக்கான அம்சங்களில் கூடுதல் மதிப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய இந்த கருத்துப் பரிமாற்றம் தேவைப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.