ஷா ஆலம், ஆக 1 – முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.08 மணியளவில் காலமானார். அன்னாருக்கு வயது 76.
கோலாலம்பூரில் உள்ள கார்டியாக் வாஸ்குலர் சென்ட்ரல் மருத்துவமனையில் அவர் தனது கடைசி மூச்சை விட்டதாக அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதய வால்வு தொற்று காரணமாக டான்ஸ்ரீ காலிட் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்னாருக்கு மனைவியும் நான்கு பிள்ளைகளும் மற்றும் இரண்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
அவரது நல்லுடல் புக்கிட் டமன்சாராவில் உள்ள சைடினா உமர் அல் கத்தாப் மசூதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பொது மக்களின் அஞ்சலிக்காக ஆலம் பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்படும்.
பிறகு, அன்னாரின் நல்லுடல் ஷா ஆலம் அரச கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முதல் செப்டம்பர் 2014 வரை சிலாங்கூரின் 14வது மந்திரி புசாராக டான்ஸ்ரீ காலிட் பணியாற்றினார்.
சிலாங்கூரில் பக்கத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்த பிறகு பொறுப்பினை ஏற்ற முதல் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் என்பது குறிப்பிடத்தக்கது.