ECONOMYSELANGOR

மறைந்த டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிமிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்றக் கூட்டம் ஒத்தி வைப்பு

ஷா ஆலம், ஆக 1– சிலாங்கூர் முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராஹிம் மறைவுக்காக சிலாங்கூர் சட்டமன்றம் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.

சிலாங்கூர் மக்கள் சார்பாக அன்னாரின் குடும்பத்தினருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக மந்திரி புசார் டான்ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஷா ஆலம் பள்ளிவாசலில் அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கும் ஷா ஆலம் அரச மையத்துக் கொல்லையில் நடைபெறும் நல்லடக்கச் சடங்கில் கலந்து கொள்வதற்கும் ஏதுவாக சட்டமன்றக் கூட்டம் பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவைக்காகவும் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்திய மந்திரி புசார் என்ற பெருமைக்காகவும் அன்னாரை கௌரவிக்கும் பொருட்டு மாநில சட்டமன்றத்தின் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என்றார் அவர்.

இருதய வால்வில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக டான்ஸ்ரீ காலிட் தலைநகர், கார்டியாக் வேஸ்குலர் சென்ட்ரல் மருத்துவமனையில் நேற்றிரவு 11.08 மணியளவில் காலமானார்.


Pengarang :