ஷா ஆலம், ஆக 2- வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 விழுக்காட்டு பங்களிப்பை சிலாங்கூர் வழங்குவதை முதலாவது சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.-1) விரைவுபடுத்தும்.
கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட 2022 வரவு செலவுத் திட்டத்தில் அந்த 30 விழுக்காட்டு இலக்கை அடைவதற்கான காலக்கெடு 2030 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் அமலாக்கத்தின் மூலம் அதனை வரும் 2025க்குள் அடைந்து விட முடியும் எனத் தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
கடந்தாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூரின் பங்களிப்பு 25 விழுக்காடாக உயர்வு கண்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் 24.8, 24.3, 24.1 மற்றும் 23.7 விழுக்காடாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நமது பங்களிப்பு ஆண்டுதோறும் 0.5 விழுக்காடு அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
இதன் அடிப்படையில் பார்த்தால் வரும் 2025 ஆம் ஆண்டில் 27 விழுக்காட்டை நாம் அடைய முடியும். எனினும், முதலாவது சிலாங்கூர் திட்டம் மற்றும் அதற்கு வலுவூட்டும் இதர திட்டங்களின் வாயிலாக 30 விழுக்காட்டு பங்களிப்பை 2025 ஆம் ஆண்டில் அடைந்து விட முடியும் என மாநில சட்டமன்றத்தில் அவர் குறிப்பிட்டார்.