சுபாங் ஜெயா, ஆக 4- இங்கு யுஎஸ்ஜே 1 இல் அமைந்துள்ள தெங்கு அம்புவான் ரஹிமா பல்நோக்கு மண்டபத்தை மேண்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் இன்று திறந்து வைத்தார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகினும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
சுமார் 5,000 சதுரடி பரப்பளவிலான இந்த மண்டபத்தை அரசு சாரா அமைப்பான சஹாயா தெங்கு அம்புவான் ரஹிமா சிலாங்கூர் சமூக நல இல்லம் பராமரித்து வருகிறது.
ஒரு சமயத்தில் 300 பேர் வரை அமரக்கூடிய இந்த மண்டபத்தில் திருமணம், பிறந்தநாள், கருத்தரங்கு, நிறுவன நிகழ்வுகள் போன்றவற்றை நடத்த முடியும்.
இந்த மண்டபத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த சமூக அமைப்புக்கும் இதர சமூக நல இயக்கங்களுக்கும் வழங்கப்படும் என்று அதன் தலைவர் தெங்கு புத்ரி நோர் ஸேஹான் சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கூறினார்.