ECONOMYNATIONAL

நஜிப்பிற்கு எதிரான தீர்ப்பின் நகல் அம்பலமானது தொடர்பில் இரு புகார்கள்- போலீசார் உறுதிப்படுத்தினர்

புத்ராஜெயா, ஆக 25– முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான தீர்ப்பின் நகல் முன்கூட்டியே கசிந்தது தொடர்பில் தாங்கள் இரு புகார்களைப் பெற்றுள்ளதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை பெறப்பட்ட அந்த புகார்கள் மீது மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மாடி அப்துல் அஜிஸ் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் 203ஏ பிரிவு, தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233வது பிரிவு மற்றும் அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் 8 வது பிரிவின் கீழ் இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

புகார்தாரர் மற்றும் வர்த்தக தொடர்பு பிரிவு அதிகாரி ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் சிலரிடம் விரைவில் வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப் புலனம் மூலம் நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த தீர்ப்பின் நகல் முன்கூட்டியே அம்பலமானது தொடர்பில் நீதிமன்ற அதிகாரிகள் புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு பாக்கார் கூறினார்.


Pengarang :