ECONOMYSELANGOR

85 மீடியா சிலாங்கூர் பணியாளர்கள் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்

ஷா ஆலம், ஆக 25- நெறியற்ற லஞ்ச நடவடிக்கைகளைத் துடைத்தொழிப்பதற்கும் உயர் நெறி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் (எம்.எஸ்.எஸ்.பி.) 85 பணியாளர்கள் இன்று ஊழல் எதிர்ப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.

பி.கே.என்.எஸ். தலைமையகத்தின் டத்தோஸ்ரீ ஹருண் இட்ரிஸ் ஆடிட்டோரியத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முகமது ஃபாரிட் முகமது அஸாரி உறுதி மொழி எடுக்கும் சடங்கிற்கு தலைமை தாங்கினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் மாநில துணை இயக்குநர் ரிட்சுவான் மாலிக் மற்றும் மந்திரி புசார் ஒருங்கிணைக்கப்பட்ட கழகத்தின் (எம்.பி.ஐ.) தலைமை செயல் முறை அதிகாரி நோரித்தா சிடேக் முன்னிலையில் இச்சடங்கு நடைபெற்றது.

ஊழலை ஒழிப்பதில் போதிய விழிப்புணர்வையும் படிப்பினையையும் வழங்குவதற்கான மீடியா சிலாங்கூர் நிறுவனத்தின் வியூகமாக இந்த உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு அமைவதாக முகமது ஃபாரிட் தமதுரையில் குறிப்பிட்டார்.

இந்த உறுதி மொழியின் வாயிலாக நிர்வாகப் பணிகளை  மேற்கொள்ளும் போது மிகுந்த பொறுப்புணர்வுடனும் உயர்நெறியுடனும் நடந்து கொள்வதற்குரிய சூழல் இந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் சிறப்பு உயர் நெறிப் பிரிவை உருவாக்கும் முயற்சியில் மாநில அரசுக்குச் சொந்தமான இந்த ஊடக நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :