ஷா ஆலம், ஆக 27- நாட்டில் நேற்று புதிதாக 3,118 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,206 ஆக இருந்தது.
இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்த 71 ஆயிரத்து 512 ஆக உயர்வு கண்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 35,737 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களில் 34,294 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,345 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 75 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள வேளையில் 23 பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் பயன்பாடு 62.9 விழுக்காடாக உள்ளது. அதில் சிகிச்சைப் பெறுவோரில் 20.1 விழுக்காட்டினர் கோவிட்-19 நோயாளிகளாவர்.
கோவிட்-19 நோய்த் தொற்று சம்பந்தப்பட்ட ஆறு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 36,145 ஆக உயர்ந்துள்ளது.